விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு
ஓமலூர் அருகே தும்பிபாடி கிராம விவசாயிகள், விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனர்.
ஓமலூர் அருகே தும்பிபாடி கிராம விவசாயிகள், விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனர்.
ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் விமான நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தை தற்போது விரிவாக்கம் செய்வதாக கூறி மத்திய மாநில அரசு சுமார் 750ஏக்கர் விளை நிலங்களை கையப்படுத்தத் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தைச் சுற்றியுள்ள காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி ஆகிய நான்கு கிராமங்கிளில் இருந்து விவசாய விளை நிலங்களை எடுக்க நில அளவீடு செய்யப்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நிலங்களை எடுப்பது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்ஆகியோரிடம், விவசாயிகள் நிலம் கொடுக்கமாட்டோம் என்று மனுக்கள் கொடுத்துள்ளனர்.ஆனால், அதற்கான ஒப்புகைச் சீட்டை வழங்காத அதிகாரிகள் அரசுக்கு தவறான தகவல்களை அனுப்பி வைத்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தும்பிபாடி ஊராட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தும்பிபாடி மாரியம்மன் கோயிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம்வரை ஊர்வலமாக நடந்து சென்றனர். பின்னர் முள்ளிசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்து தங்களது நிலங்களை விமான நிலைய விரிவாக்கத்துக்கு அளிக்க விருப்பம் இல்லை என தனித்தனியாக மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களுக்கான ஒப்புகை ரசீது வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் சம்பத் தலைமையிலான போலீஸார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து உயர் அதிகாரிகளிடம் தங்கள் மனுவை கொண்டு செல்வதாக கிராம அலுவலர் அளித்த வாக்குறுதியை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.