மரங்களில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர பலகைகளை ஜூன் 15-க்குள் அகற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையர்
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரங்களின் மீது ஆணி அடித்து பொருத்தப்பட்டுள்ள விளம்பர பலகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குள்
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரங்களின் மீது ஆணி அடித்து பொருத்தப்பட்டுள்ள விளம்பர பலகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட கிழக்குத் தோட்டம் தெருவில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மரங்களில் ஆணி அடித்து பொருத்தப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் புதன்கிழமை துவக்கி வைத்தார்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் மரங்களில் பதிக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விளம்பரப் பலகைகளை அகற்றிய மரங்களின் மீது மீண்டும் விளம்பரப் பலகைகள் பொருத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது, உரிய சட்டவிதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் மரங்களின் மீது உள்ள அனைத்து விளம்பரப் பலகைகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தாமாக முன்வந்து, அகற்றுவதற்கான நடவடிக்கையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில் மரங்களில் பொருத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றப்படுவதோடு, அதற்கான செலவினத்தொகையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு, அபராதத் தொகையும் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மரங்களின் மீது விளம்பரப் பலகைகள் பொருத்தப்படாமல் பாதுகாக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் வி.பிரபாகரன், உதவி ஆணையர் கே.பி.கோவிந்தன், சுகாதார அலுவலர் கே.ரவிச்சந்தர், எமரால்டு வேலி பப்ளிக் பள்ளி தாளாளர் எஸ். மீனா சேது, பள்ளி முதல்வர் பி. காஞ்சனா மாணவ, மாணவியர்கள் சுகாதர ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.