விமான நிலைய விரிவாக்கம்: நிலம் அளிக்க மறுத்து விவசாயிகள் கடிதம்
ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விமான நிலைய விரிவாக்கத்துக்கு
ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் அளிக்க மறுப்பு தெரிவித்து கடிதம் அளித்தனர்.
சேலம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையம் 160 ஏக்கர் நில பரப்பில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை விரிவுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும், சேலம் விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொட்டியபுரம், காமலாபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள 570 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு நான்கு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகளின் ஆதரவுகளையும் இப்பகுதி விவசாயிகள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காமலாபுரத்தில் உள்ள 36 விவசாயிகளுக்கு வருவாய்த் துறையினர் அழைப்பு விடுத்து இருந்தனர். மேலும், அஞ்சல் மூலம் ஆட்சேபனை தெரிவித்தல் அழைப்புக்கடிதத்தையும் அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில், விவசாயிகளின் ஆட்சேபனைக் கருத்துக் கேட்புக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கோட்டாட்சியர் ராமதுரைமுருகன், வட்டாட்சியர் சித்ரா, நில எடுப்பு வட்டாட்சியர் சாந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கத்தால் விவசாய நிலங்களை இழக்கும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.அவர்கள் அனைவரும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தங்களது நிலங்களை அளிக்க மாட்டோம். தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் நாங்கள் வேறு பகுதிக்கு செல்ல மாட்டோம். எங்களது நிலங்களை அரசுக்கு அளிக்க விருப்பமில்லை என்று ஒவ்வொரு விவசாயிகளும் தனித் தனியாகவும், கூட்டாகவும் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்தனர். விவசாயிகளின் இந்தக் கருத்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து குழு, குழுவாக இதுபோன்ற கூட்டங்கள் நடத்தி விவசாயிகளின் கருத்துகள் கேட்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.