வாழப்பாடி, பேளூர் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
சேலம் மாவட்டம், வாழப்பாடி காசி விஸ்வநாதர், பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி காசி விஸ்வநாதர், பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.
வாழப்பாடி காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்திலுள்ள நந்தீஸ்வரனுக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், தேன், பழவகைகளால் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும், சிறப்பு பூஜை வழிபாடும் நடைபெற்றன. மூலவரான காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிளித்தனர். மேள வாத்தியம் முழங்கிட ரிஷப வாகனத்தில், நடராஜர்-அம்பாள் கோயில் வளாகத்தைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தனர். வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோயில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்ப மூர்த்திஸ்வரர், கல்யாணகிரி தேன்மலை சிவாலயம், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி கருணாகரேஸ்வரர் கோயில்களிலும் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு, நந்தீஸ்வரனுக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் கட்டளைதாரர்கள் வாயிலாக அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன.
இதுபோல சேலம் மாவட்டம், ஆத்தூர் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.