பாண்டமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலம் சந்தை பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலம் சந்தை பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வேலூர் காவல் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் மினிசார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாண்டமங்கலம் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது வீட்டுக்கு அருகே ஆட்டுகொட்டைகை அமைத்துள்ளனர். ஆட்டுக்கொட்டகைக்கு மின் விளக்குகளுக்கென தனியாக மின்வயர் அமைத்து அதை ஒரு கம்பியில் இழுத்து கட்டியுள்ளனர்.
நேற்றிரவு பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் மின்வயரில் பழுது ஏற்படுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மனைவி பழனியம்மாள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்பொழுது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை பார்த்த கணவர் பரமசிவம் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அவரையும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
Advertisement
சத்தம் கேட்டு அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தர்மன் என்பவருக்கும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அதிஷ்டவசமாக தர்மன் காயங்களின்றி உயிர் தப்பினார். தர்மன் மற்றும் அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு வந்த மின்வாரியத்தினர், மின்சாரத்தை துண்டித்து பரமத்தி வேலூர் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் கணவன்,மனைவி ஆகியோரின் பிரேதத்தை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து பரமத்திவேலூர் காவல் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் மின்சார வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி மின்சாரம் பாய்ந்து பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.