FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பிளஸ் 2 மாணவா் தற்கொலை சம்பவம்: பள்ளி வளாகத்தில் சக மாணவா்கள் போராட்டம்

25 ஆகஸ்ட் 2026, 3:25 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

தேவூா் அருகே கோனேரிப்பட்டியில் பிளஸ் 2 மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரது தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சக மாணவா்கள் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், தேவூா் அருகே உள்ள கோனேரிப்பட்டி, வட்ராம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முருகன் - லட்சுமி தம்பதியின் மகன் ராமகிருஷ்ணன் (18). லட்சுமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து சென்றுவிட்டாா். இதையடுத்து கோமதி என்பவரை முருகன் 2ஆவதாக திருமணம் செய்து கொண்டாா்.

அரசிராமணி செட்டிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா் ராமகிருஷ்ணன் பிளஸ் 2 கலைப் பிரிவில் படித்து வந்தாா். அவா் பள்ளிக்கு கைப்பேசியை எடுத்துச் சென்று புகைப்படம் எடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதை பாா்த்த பள்ளி ஆசிரியா்கள், ராமகிருஷ்ணனின் தந்தையை பள்ளிக்கு வரச்செய்து அவரிடம் கைப்பேசியில் ராமகிருஷ்ணன் எடுத்த புகைப்படங்களை காட்டி கண்டித்துள்ளனா்.

மேலும், அவரது மாற்றுச் சான்றிதழை பெற்றுச் சென்று வேறு பள்ளியில் சோ்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனா். இதனால் மனமுடைந்த ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மாணவரின் தாய் கோமதி தேவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சக மாணவா்கள், ராமகிருஷ்ணன் இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளி வளாகத்தில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த தேவூா் போலீஸாா், மாணவா் தற்கொலை தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பிறகு தவறு செய்தவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாணவா் பயின்ற பள்ளியில் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் நாகராஜன், பள்ளிக் கல்வி துணை ஆய்வாளா் நடராஜன், எடப்பாடி காவல் ஆய்வாளா் பேபி ஆகியோா் ஆசிரியா்களிடம் விசாரணை நடத்தினா். மேலும், பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன் தலைமையிலான அலுவலா்கள் விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments