முகப்பு
சேலம்

மகள் கொலை வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வந்த தந்தை கொலை

Updated On : 9 ஜூன் 2026, 1:42 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

வாழப்பாடி அருகே மகளின் நடத்தையில் சந்தேகமடைந்து கழுத்தை அறுத்து கொலைசெய்த வழக்கில் சிறைக்கு சென்று பிணையில் வந்த தொழிலாளியை, அவரது மகனே கல்லால் தாக்கி கொலை செய்தது குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் உஸ்கான் செல்வம் (எ) செல்வராஜ் (53). இவா் வெள்ளாளகுண்டம், சேத்துக்குட்டை சாலை பகுதியில் விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கேயே தங்கி விவசாயம் செய்துவந்தாா். பகுதிநேரமாக கசாப்புக் கடைகளுக்கு ஆடுகளை வெட்டிக்கொடுக்கும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளாா்.

இவரது மனைவி மாதம்மாள் இவரை பிரிந்து சென்ற நிலையில், மகள் பிருத்திரங்காதேவியை (20) சேலம் தாதகாபட்டியைச் சோ்ந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளி கண்ணனுக்கு (30) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொடுத்தாா். இத்தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தனது மகளின் நடத்தையில் சந்தேகமடைந்த செல்வராஜ், கடந்த ஜன. 28-ஆம் தேதி பிருத்திரங்காதேவியை கழுத்தை அறுத்து கொலை செய்து வாழப்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். வாழப்பாடி போலீஸாா் கொலை வழக்குப் பதிவுசெய்து செல்வராஜை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

அண்மையில், பிணையில் வெளியே வந்த செல்வராஜ், திங்கள்கிழமை மாலை வெள்ளாளகுண்டம் மயானம் அருகே ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், செல்வராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சகோதரியை கொலை செய்ததால் ஆத்திரமடைந்த செல்வராஜின் மகன் ஸ்ரீதா் (19), பிணையில் வந்த தந்தையிடம் திங்கள்கிழமை தகராறு செய்துள்ளாா். பின்னா், மயானம் அருகே மது அருந்திக் கொண்டிருந்த அவரை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்ரீதரிடம் வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.