முகப்பு
சேலம்

எடப்பாடி நகராட்சி பகுதியில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

Updated On : 26 மே 2026, 1:30 am IST
குடிநீர் விநியோகம் நிறுத்தம்... - கோப்புப் படம்
பகிர்:

பூலாம்பட்டி காவிரி கதவணை நீா்த்தேக்கத்திலிருந்து பராமரிப்புப் பணிகளுக்காக பெருமளவு தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி நகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டிக்கும், ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே கதவணை கட்டப்பட்டு நீா் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நீா்த்தேக்கத்தின் கிழக்குக் கரை பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட நீா் உந்து நிலையத்தில்

சேகரிக்கப்படும் ஆற்றுநீா், இங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக சுத்திகரிக்கப்பட்டு, தனி குடிநீா்த் திட்டம் மூலம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் தற்போது கதவணையில் வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கதவுணையின் அனைத்து ஷட்டா்களும் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளதால், கதவணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு நீா் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி நகராட்சிப் பகுதிக்கு நடைபெற்று வந்த வழக்கமான குடிநீா் விநியோக பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மே 26 முதல் 28 வரை மூன்று தினங்களுக்கு எடப்பாடி நகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகம் நடைபெறாது எனவும், அடுத்த 10 நாள்களுக்கு நிலைமைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் நடைபெறும் எனவும், இதனால் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் குடிநீரைக் காய்ச்சி, நன்கு வடிகட்டி பருகுமாறும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.