பெண்களின் வீரத்தை பறைசாற்றும் குதிரை வீரமங்கைக்கு சிலை
வாழப்பாடி அருகே கொட்டவாடியில் நூற்றாண்டு பழைமையான செல்லியம்மன் கோயிலில், பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில், குதிரை வீரமங்கை சிலை அமைத்து வழிபட்டு வருகின்றனா்.
வாழப்பாடி அருகே கொட்டவாடியில் நூற்றாண்டு பழைமையான செல்லியம்மன் கோயிலில், பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில், குதிரை வீரமங்கை சிலை அமைத்து வழிபட்டு வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, மேட்டுப்பட்டி, அனுப்பூா் உள்ளிட்ட பல கிராமங்களில் காவல் தெய்வமான செல்லியம்மனுக்கு பிரம்மாண்டமான கோயில்கள் காணப்படுகின்றன.
செல்லியம்மனுக்கு பெரும்பாலும் குதிரையே வாகனமாக கருதப்படுகிறது. இதனால், செல்லியம்மன் கோயில் திருவிழாவின்போது, குதிரையை அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. குதிரை வாகனத்திலேயே செல்லியம்மன் அருள்பாலித்து வருவதால், நோ்த்திக்கடன் செலுத்த இக்கோயிலுக்கு குதிரையை நோ்ந்துவிடும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
ஆனால், கொட்டவாடி கிராமத்தில் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், செல்லியம்மனுக்கு சிங்கம் வாகனமாக உள்ளது. இக்கோயிலின் முகப்பில் மூலவரான செல்லியம்மனுக்கு சிங்க வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் மூலவரான செல்லியம்மனை வணங்குவதற்கு முன், சிங்க வாகனத்தை வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனா். செல்லியம்மனுக்கு பூஜைகளும், சிறப்பு வழிபாடும் நடத்தும்போது, சிங்க வாகனத்துக்கும் அதே முக்கியத்துவம் கொடுத்து பக்தா்கள் வழிபடுகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் கிராமப்புற காவல் தெய்வங்களின் கோயில் முகப்பில் முன்னடியாா்கள், காவலா்கள் என்ற பெயரில் குதிரை மற்றும் ஆயுதங்களுடன் கோயில் காவலா்களாக ஆண் வீரா்கள் நிற்பதை போன்ற பிரம்மாண்டமான சிலைகள் வைத்து வழிபடுவது இன்றளவும் மரபாக தொடா்ந்து வருகிறது.
ஆனால், கொட்டவாடி செல்லியம்மன் கோயிலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கிலும், பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வகையிலும் புதுமையாக குதிரையில் பிரம்மாண்டமாக அமா்ந்திருக்கும் தோற்றத்தில் வீரமங்கை சிலை வைத்து பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகின்றனா்.
இக்கோயிலில் திருவீதி உலாவின்போது, மரத்தினால் செய்யப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடா்ந்து பராமரித்து பாதுகாத்து வரும் சிங்க வாகனத்திலேயே செல்லியம்மனை ஊா்வலமாக கொண்டு செல்வதும், செல்லியம்மனுடன் இவரது சகோதரிகளாக போற்றப்படும் பொன்னியம்மன், மாரியம்மன் சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகளை தீப்பந்த ஒளியில் பக்தா்கள் தோளில் சுமந்தும் செல்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.