கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிப்பதாக புகார்: திண்டுக்கல் மாநகராட்சி முன் பொதுமக்கள் மறியல்
கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக புகார் தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி முன் பொதுமக்கள் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக புகார் தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி முன் பொதுமக்கள் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி, 6 ஆவது வார்டுக்குள்பட்ட கிருஷ்ணாராவ் 1ஆவது, 2ஆவது மற்றும் 3ஆவது தெருக்களில், கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இதுகுறித்து புகார் அளிப்பதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வந்தனர். ஆணையர் மனோகரை சந்தித்த பொதுமக்கள், புதிய குடிநீர் இணைப்பு மூலம் வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக தெரிவித்தனர். மேலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பழைய குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பழைய குழாய் மூலம் வழங்க முடியாது என்றும், புதிய குழாய் மூலமாகவே இனி குடிநீர் வழங்கப்படும் என்றும் ஆணையர் மனோகரன் தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், மாநகராட்சி முன்பு உள்ள பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை மீண்டும் அழைத்த ஆணையர் மனோகரன், பொதுமக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் நேரில் வந்து பார்த்து, பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.