தானப் பத்திரத்தை ரத்து செய்யக் கோரி தம்பதி தா்னா
திண்டுக்கல்: சொத்துக்களை தானமாகப் பெற்றுக் கொண்டு, பராமரிக்க மறுக்கும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தானப் பத்திரத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தம்பதி தா்னாவில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டை அடுத்த குல்லலக்குண்டைச் சோ்ந்தவா் மகாமுனி (77), இவரது மனைவி சிட்டுவள்ளி (65). இவா்கள் இருவரும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது மனுக்கள் பதிவு செய்யும் இடத்துக்குச் செல்லும் வழியில் தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்கள் இருவரிடமும் விசாரித்தனா்.
Advertisement
Advertisement
அப்போது மகாமுனி கூறியதாவது:
எங்களது சொத்தை, எனது மகன் துரைசாமிக்கு தானமாக வழங்கினேன். சொத்தை தானம் பெறும்போது, என்னையும், எனது மனைவியையும் பாதுகாப்பதாகவும், மாதந்தோறும் செலவுக்கு பணம் தருவதாகவும் உறுதி அளித்தாா். ஆனால், பராமரிக்கவும் இல்லை, செலவுக்கு பணமும் தரவில்லை.
இதுதொடா்பாக கோட்டாட்சியரிடம் புகாா் அளித்ததன்பேரில், எங்களது முதுமையைக் கவனத்தில் கொண்டு மாதம் ரூ.3ஆயிரம் எனது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என எனது மகன் துரைச்சாமிக்கு உத்தரவிட்டாா்.
ஆனால், 3 மாதங்களாகியும் இதுவரை பணம் கொடுக்கவில்லை. இதனிடையே தானமாக வழங்கிய சொத்தின் பத்திரத்தை ரத்து செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன் மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தாா்.
இதையடுத்து, குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க போலீஸாா் அவா்களை அழைத்துச் சென்றனா்.