கீழக்கரையில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திங்கள்கிழமை இரவு காய்கறி வியாபாரி வீட்டின் பின்புறக் கதவை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திங்கள்கிழமை இரவு காய்கறி வியாபாரி வீட்டின் பின்புறக் கதவை உடைத்து பத்தொன்பதரை பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
கீழக்கரை ஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் இறந்ததையடுத்து, வீட்டைப் பூட்டிவிட்டு பக்கத்து ஊரான தட்டான்தோப்புக்கு மனை வியுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு அவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த பத்தொன்பதரை பவுன் தங்க
நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். மேலும் வீட்டின் முன்பக்கக் கதவில் உள்தாழ்ப்பாளை தாழிட்டுச்
சென்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பிய முருகேசன், முன்பக்க கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். இதனால் அவர் வீட்டின் பின்பகுதிக்குச் சென்று பார்த்த போது, பின்பக்கக் கதவை உடைத்து மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்தப் புகாரின் பேரில் கீழக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் தலைமையிலான போலீஸார் சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டின் உரிமையாளர் முருகேசனிடம் புகாரைப் பெற்ற கீழக்கரை போலீஸார், மாலையில் வழக்குப்பதிவு செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.