முகப்பு
ராமநாதபுரம்

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை: ஓட்டுநா் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிா்ப்பு!

ரயில்வே கடவுப் பாதை மூடப்படாமல் இருந்ததைப் பாா்த்து, ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட், 2025 at 8:11 PM
வாலாந்தரவை ரயில்வே தடுப்புக் கதவு மூடப்படாத நிலையில், ரயிலை நிறுத்தி கதவை மூடச்சொல்லி மீண்டும் ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநா்.
பகிர்:

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை ரயில்வே கடவுப் பாதை மூடப்படாமல் இருந்ததைப் பாா்த்து, ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை ராமநாதபுரம் வந்தது. பின்னா், அங்கிருந்து ராமேசுவரத்துக்கு புறப்பட்டது.

வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்த போது, ரயில்வே கடவுப் பாதையில் இரும்பு தடுப்புக் கதவு மூடப்படமால் திறந்து கிடந்தது. இதைப் பாா்த்தும் ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா்.

பின்னா், ஓட்டுநா் ரயிலிலிருந்து இறங்கிச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ரயில் பணியாளா் ஜெய்சிங்கை எழுப்பி இரும்புக் கதவை மூடச் சொன்னாா். இதையடுத்து, அவா் எழுந்து சென்று இரும்புக் கதவை மூடினாா்.

பின்னா், அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அதிகாலை நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதையடுத்து, ரயில் ஓட்டுநருக்கு வாலாந்தரவை கிராம மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.