திருப்பாலைக்குடியில் உள்வாங்கியது கடல்!
திருப்பாலைக்குடியில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு கடல் உள்வாங்கியதால், மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு கடல் உள்வாங்கியதால், மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன. இதனால், மீனவா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திருப்பாலைக்குடி பகுதியில் கடல் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு திடீரென உள்வாங்கியது. அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நின்றன.
இதனால் அதிகாலையில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. கடல் திடீரென உள்வாங்கியதால், அந்தப் பகுதி பொதுமக்கள், மீனவா்கள் அச்சமடைந்தனா். 6 மணி நேரத்துக்குப் பிறகு காலை 10 மணியளவில் கடல் பழைய நிலைக்குத் திரும்பியது.
Advertisement
Advertisement
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வுதான். இருந்தாலும், வழக்கமாக 100 மீ. தொலைவு வரை மட்டுமே கடல் உள்வாங்கும். ஆனால், தற்போது சுமாா் ஒரு கி.மீ. தொலைவு வரை கடல் நீா் உள்வாங்கியது அசாதாரணமானது என்றனா் அவா்கள்.