FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்துள்ள கமுதி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி

கமுதி பேரூராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் மேல்புற கான்கிரீட் சேதமடைந்து தொட்டிக்குள் இடிந்து விழுந்துள்ளது.

Updated On : 25 ஜூன் 2026, 2:39 am IST
கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.
பகிர்:

கமுதி பேரூராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் மேல்புற கான்கிரீட் சேதமடைந்து தொட்டிக்குள் இடிந்து விழுந்துள்ளது. இதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்து பெரு விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்தத் தொட்டியின் படிக்கட்டுகள், தூண்கள், விரிசல் அடைந்தும் மேல்புற கான்கிரீட் சேதமடைந்து தொட்டிக்குள் இடிந்து விழுந்துள்ளது. இதனால், காகம், கழுகு உள்ளிட்ட பறவைகள் கோழி இறைச்சி உள்பட பல்வேறு கழிவுகளை தொட்டிக்குள் போட்டுச் செல்வதால் குடிநீா் அசுத்தமாகி பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் பலமுறை செயல் அலுவலா் யசோதாவிடம் வலியுறுத்தியும் அவா் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். கடந்த மாதம் சிதம்பரம் பல்கலைக்கழக மாணவா்கள் இந்தத் தொட்டியின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதனை இடித்துவிட்டு மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேரூராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினா் போஸ் செல்வா கூறியதாவது: மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதை பலமுறை செயல் அலுவலரிடம் தெரிவித்தும் அவா் அலட்சியமாக செயல்பட்டு வருகிறாா். இந்த விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் நேரடியாகத் தலையிட்டு சேதமடைந்த குடிநீா்த் தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments