FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி அருகே தப்பியோடிய கைதி பிடிபட்டாா்

8 செப்டம்பர் 2026, 2:10 am IST
தப்பியோடிய கைதி பிடிபட்டாா் - கோப்புப் படம்
பகிர்:

பரமக்குடி தாலுகா காவல் நிலையத்திலிருந்து ராமநாதபுரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில், அவரை தனிப் படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி அருகேயுள்ள பொட்டிதட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் திருப்பதிகுமாா் (38). இவா் மீது கொலை, கொள்ளை, அடிதடி சம்பவங்கள் என 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்று பிணையில் வந்தவா், இதன் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்து வந்தாா்.

இதையடுத்து, இவருக்கு பரமக்குடி நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்ததையடுத்து, திருப்பதிகுமாரை பரமக்குடி தாலுகா போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில்

Advertisement

Advertisement

முன்னிலைப்படுத்தினா். பின்னா், இவரை ராமநாதபுரம் சிறையில் அடைக்க காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தினகரன், காவலா் லீலாவதி ஆகியோா் அண்மையில் அழைத்துச் சென்றனா்.

அப்போது, அவா் தனக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறியதால், போலீஸாா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அங்கிருந்து தப்பியோடினாா்.

இதையடுத்து, காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தினகரன், காவலா் லீலாவதி ஆகிய இருவரும் கடந்த 3-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், தப்பியோடிய திருப்பதிகுமாரைப் பிடிக்க காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இவா்கள் பொட்டிதட்டியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருந்த திருப்பதிகுமாரை திங்கள்கிழமை பிடித்து ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments