ஆக்கிரமிப்பு அகற்றும்போது சேதம்: சிவகங்கையில் முழுக் கடையடைப்பு போராட்டம்
சிவகங்கையில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது கடைகள் சேதமடைந்ததைக் கண்டித்து, நகர் வர்த்தகர்கள் முழுக் கடையடைப்பு போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.
சிவகங்கையில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது கடைகள் சேதமடைந்ததைக் கண்டித்து, நகர் வர்த்தகர்கள் முழுக் கடையடைப்பு போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க. லதா உத்தரவின்பேரில், கடந்த ஜூலை 29ஆம் தேதி நகரின் முக்கிய வர்த்தகப் பகுதியான நேரு கடை வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்த மேற்கூரைகளை, நகராட்சி ஆணையர் அயூப்கான் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், காவல் துறையினர் அகற்றினர்.
பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது, கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், உரிய கால அவகாசம் வழங்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அலுவலர்களைக் கண்டிக்கும் விதமாக, வர்த்தகர்கள் வியாழக்கிழமை முழுக் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்: கடையடைப்பு போராட்டத்தைத் தொடர்ந்து, சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு, சிவகங்கை நகர் வர்த்தகர் சங்கத் தலைவர் அறிவுதிலகம் தலைமை வகித்தார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், உரிய கால அவகாசம் வழங்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலர் பைசல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சண்முகராஜன், வர்த்தகர் சங்க செயலர் வடிவேல், பொருளாளர் சுகர்னா, துணைத் தலைவர் முகமது இலியாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.