சிவகங்கையில் டிச.26-இல் தொழில் முனைவோர் கருத்தரங்கு: ஆட்சியர் அறிவிப்பு
சிவகங்கையில் டிச.26-இல் தொழில் முனைவோர் கருத்தரங்கு: ஆட்சியர் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுயஉதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் அரசின் நிதியுதவி பெற்று தொழில் தொடங்குவது குறித்த கருத்தரங்கு டிச.26 இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னர், ஆட்சியர் பேசியதாவது:
அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க அனைத்துத் துறை அலுவலர்களும் முழுக் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டு மனைப் பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கு துரித விசாரணை மேற்கொண்டு உரிய காலத்தில் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஏற்கெனவே பட்டா வைத்துள்ளவர்கள் வீடு கட்ட வேண்டி விண்ணப்பித்தால் ஊரக வளர்ச்சித்துறை மூலம் உடனடியாக வீடு கட்டித்தரப்படும். அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் சேதமடைந்திருந்தால், அதைப் பராமரிக்க நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம். மேலும், சட்டம் - ஒழுங்கு தொடர்பான பிரச்னைகள் மீதும் காவல்துறை கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோ மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் தொழில் தொடங்க வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் டிச. 26 ஆம் தேதி கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில், மகளிர் குழுவினர் கலந்து கொண்டு சுயதொழில் தொடங்குவது குறித்தும், தொழிற் பயிற்சி குறித்தும், தொழில் கடன் பெறுவதற்கான வழிமுறை மற்றும் அதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறையை தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி திட்ட இயக்குநர் சு.வடிவேல், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள், காவல்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.