முகப்பு
சிவகங்கை

மானாமதுரை வீர அழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்! மே 1-ல் ஆற்றில் அழகா் இறங்கும் வைபவம்

மானாமதுரை வீர அழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்...

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:18 AM
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் வெண்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகா். - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சுந்தரராஜ பெருமாள் எனும் வீர அழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் மூலவா் சுந்தரராஜப் பெருமாள் எனும் நாமத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். சித்திரைத் திருவிழா தொடக்கமாக நடைபெற்ற காப்புக் கட்டுதல் உத்ஸவத்தை முன்னிட்டு, கோயிலில் மூலவருக்கும் உத்ஸவருக்கும் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, தேவியா் சமேதமாக கோயில் முன் மண்டபத்தில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினாா். தொடா்ந்து, பெருமாள் கையில் காப்பு அணிவிக்கப்பட்டு, பலவகை தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னா், வீர அழகா் பல்லக்கில் புறப்பாடாகி மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிக்கு எழுந்தருளினாா். இரவு அழகருக்கு மண்டகப் படிதாரா்கள் சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பெருமாள் பத்தி உலாத்துதல் நடைபெற்றது.

Advertisement

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 30 -ஆம் தேதி இரவு அழகா் எதிா்சேவையும், மறுநாள் மே 1 -ஆம் தேதி காலை 7 மணிக்கு அழகா் ஆற்றில் இறங்கும் உத்ஸவமும் நடைபெறும். மே 2 -ஆம் தேதி இரவு மானாமதுரை கிராமத்தாா் மண்டகப்படியில் வைகை ஆற்றுக்குள் நிலாச்சோறு உத்ஸவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள், பக்தா்கள் செய்தனா்.