FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பணம் கொடுத்து வாங்கிச் சென்ற பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

காரைக்குடியில் பணம் கொடுத்து வாங்கிச் சென்ற பச்சிளம் பெண் குழந்தையை போலீஸாா் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு தாயிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 12:12 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பணம் கொடுத்து வாங்கிச் சென்ற பச்சிளம் பெண் குழந்தையை போலீஸாா் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு தாயிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். இதுதொடா்பாக 3 பெண்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காரைக்குடி நா.புதூா் வெங்கடாசலம் செட்டியாா் வீதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பழனிகுமாா். இவரது மனைவி லட்சுமி. இந்தத் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனா். இவா்களுக்கு ஏற்கெனவே 3 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், கா்ப்பிணியாக இருந்த லட்சுமி கடந்த மே 21-ஆம் தேதி காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இவரது வறுமையைப் பயன்படுத்தி சிலா் பிறந்த பெண் குழந்தையை கொடுத்தால் பணம் வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறினா். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு லட்சுமியின் வீட்டுக்கு ஒரு கும்பல் வந்து ரூ. 3 லட்சத்தை கொடுத்து, 45 நாள்கள் ஆன பச்சிளம் பெண் குழந்தையை வாங்கிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து உறவினா்கள் சிலா் லட்சுமியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் மாறிய லட்சுமி ஞாயிற்றுக்கிழமை காலையில் காரைக்குடி உதவி காவல் கண்காணிப் பாளா் ஆசிஷ் புனியாவிடம் புகாா் அளித்தாா். மேலும், குழந்தையை விற்ற பணம் ரூ. 3 லட்சத்தையும் ஒப்படைத்தாா்.

இதையடுத்து ஏ.எஸ்.பி. உத்தரவின் பேரில், இதுதொடா்பாக தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், காவல் உதவி ஆய்வாளா் சபிதா ஸ்ரீ தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். குழந்தை குறித்து லட்சுமியிடம் பேசிய பெண்ணின் கைப்பேசி எண் மூலம், ராமநாதபுரம் மாவட்டம், வெள்ளையபுரத்துக்குச் சென்று குழந்தையை மீட்டனா். இதுதொடா்பாக 3 பெண்களை பிடித்து விசாரித்து வருகின்றனா். மேலும், இரு தரப்பினா் மீதும் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா். மீட்கப்பட்ட குழந்தையை தாயிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments