ஆத்திப்பட்டியில் தெருவிளக்குகள் இல்லாததால் வழிப்பறி அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் ஆத்திப்பட்டி ஊராட்சியில் பெத்தம்மாள் நகர்,நாராயணபுரம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் ஆத்திப்பட்டி ஊராட்சியில் பெத்தம்மாள் நகர்,நாராயணபுரம் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி அதிகரித்துள்ளதால் கூடுதல் தெரு மின் விளக்குகள் அமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டையிலிருந்து 3 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது ஆத்திப்பட்டி கிராமம். சுமார் 5000 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் பெத்தம்மாள் நகர் மற்றும் நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 600-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.
புதிய விரிவாக்கப் பகுதிகளான இங்கு ஆரம்பம் முதலே பல்வேறு அடிப்படை வசதிகளான வாருகால், தெருமின் விளக்குகள் உள்ளிட்டவை பல தெருக்களில் இல்லை. போதிய தெருமின் விளக்குகள் இல்லாததால் பல வீதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
இதனால் அங்கு சமூகவிரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்பகுதிவாசிகள் வீட்டைப்பூட்டிவிட்டுச் சென்றால் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் வேலைக்குச்சென்றுவிட்டு வீடு திரும்பும் பெண்களிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. எனவே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் குறைந்தபட்சமாக அனைத்து வீதிகளிலும் போதிய தெருமின் விளக்குகள் இருந்தாலே பாதிக்கு மேற்பட்ட குற்றங்களைத் தடுக்க இயலும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அனைத்து வீதிகளுக்கும் கூடுதல் மின் விளக்குகள் பொருத்தவும், வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் ஆத்திப்பட்டி ஊராட்சியில் பலமுறை புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென கிராம மக்கள் கூறுகின்றனர்.
எனவே ஆத்திப்பட்டி ஊராட்சியின் பெத்தம்மாள் நகர் மற்றும் நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் அனைத்து வீதிகளுக்கும் கூடுதல் மின்விளக்குகள் அமைப்பதுடன் பிரதான பேருந்து நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்குகளை அமைக்க வேண்டுமென கிராம மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.