கட்டங்குடி கிராமத்தில் விவசாயிகள் நல்வாழ்வு இயக்கப் பயிற்சி முகாம்
அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம் விவசாயிகள் நல்வாழ்வு இயக்கத் திட்டத்தின் (கிருஷி கல்யாண் அபியான் திட்டம்) கீழ்
அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம் விவசாயிகள் நல்வாழ்வு இயக்கத் திட்டத்தின் (கிருஷி கல்யாண் அபியான் திட்டம்) கீழ், விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி முகாம் கட்டங்குடி கிராமத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இம்முகாமுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் வணிக மற்றும் விற்பனைத் துறையின் துணை இயக்குநர் கார்த்திகேயன் கூட்டுப்பண்ணையத் திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்தல், வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்தல் ஆகியன குறித்து பேசினார்.
மாவட்ட ஆட்சியரின் விவசாயத்துறை நேர்முக உதவியாளர் மணிசேகரன், நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டுத் திட்டம், நுண்ணீர்ப் பாசனத் திட்டம் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளின் வருமானம் பெருக்கும் வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார்.
அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, வேளாண் உதவி இயக்குநர் சுப்புராஜ் ஆகியோர் பயிற்சி குறித்து விளக்கமளித்தனர்.
இம்முகாமில், விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தின் கீழ், வம்பன்-6 எனும் உளுந்து சான்றுவிதை, உரங்கள் அடங்கிய பைகளை வேளாண் இணை இயக்குநர் வழங்கினார். தோட்டக்கலைத்துறை சார்பில் உதவி இயக்குநர்கள் ராதாகிருஷ்ணன், ஹேமா ஆகியோர் 50 விவசாயிகளுக்கு பழமரக்கன்றுகளை வழங்கினர். மேலும், மண்வள அட்டை பெறுதல், மண்புழு உர உற்பத்தி, மாடித்தோட்டம் அமைத்தல் காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
முகாமுக்கான ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள் சுந்தரவள்ளி, கீதா, கவிதா, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.