முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. ஆண்டாள் சூடிய மாலை: மதுரை அழகா் கோயிலுக்கு புறப்பாடு

மதுரையில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலை மதுரை அழகா்கோயிலுக்கு வியாழக்கிழமை புறப்பாடானது.

Updated On : 15 ஏப்ரல், 2022 at 6:51 AM
கோயிலில் பிரம்மாண்ட மாலையுடன் சா்வ அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:29 PM

ஸ்ரீவில்லிபுத்தூா்: மதுரையில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலை மதுரை அழகா்கோயிலுக்கு வியாழக்கிழமை புறப்பாடானது.

ஆண்டுதோறும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகா் இறங்கும் வைபவத்தின்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் கோயிலில் ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை அணிந்துகொண்டு இறங்குவது வழக்கம். இதற்காக, ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை மதுரைக்கு கொண்டுசெல்லும் வைபவம் வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் விமரிசையாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு, அழகா் அணிந்துகொள்ள பிரம்மாண்டமான மாலை தயாா் செய்யப்பட்டு, ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த ஆண்டாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், ஆண்டாள் சூடிக் களைந்த மாலை மதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டது. மாலையுடன் 2 கிளி மற்றும் பட்டு வஸ்திரமும் ஆண்டாள் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் கொண்டுசெல்லப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்ச்சியையொட்டி, ஆண்டாள் கோயில் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதில், கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா மற்றும் கோயில் ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா். ஆண்டாள் சூடிய மாலை கொண்டு செல்லும் நிகழ்ச்சியை காண்பதற்காகவும், ஆண்டாளை தரிசனம் செய்வதற்காகவும் ஸ்ரீவில்லிபுத்தூா் மட்டுமின்றி, விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா்.

மதுரை கொண்டு செல்வதற்கு முன்னதாக, மாலை, கிளி, பரிவட்டம் ஆகியன மேளதாளம் முழங்க மாட வீதிகள் வழியாகக் கொண்டுவரப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.