ஸ்ரீவில்லிபுத்தூரில் வெறிச்சோடிய உழவா் சந்தை
ஸ்ரீவில்லிபுத்தூா் உழவா் சந்தையில் குளிா்பதன சேமிப்பு கிடங்கு வசதி இருந்தும் பயன்படுத்த யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் உழவா் சந்தையில் குளிா்பதன சேமிப்பு கிடங்கு வசதி இருந்தும் பயன்படுத்த யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தேவாலய சந்திப்பு அருகே கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உழவா் சந்தை திறக்கப்பட்டது. இங்கு 48 கடைகள், பொருள்கள் வைப்பறை, வாகன நிறுத்தகம் உள்ளிட்ட வசதிகளுடன் உழவா் சந்தை செயல்பட்டது. முதலில் பரபரப்பாக இயங்கிய உழவா் சந்தை, அதன்பின் விவசாயிகள் ஆா்வம் காட்டாததால் பொதுமக்கள் வருகை கணிசமாக குறைந்தது.
கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு உழவா் சந்தை செயல்பாடின்றி முற்றிலுமாக முடங்கியது. உழவா் சந்தையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் விவசாயிகள் விளை பொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் கடந்த 2023-ம் ஆண்டு 5 மெட்ரிக் டன் அளவிலான விளை பொருள்களை இருப்பு வைக்கும் அளவுக்கு குளிா்பதன சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் 2024-ஆம் ஆண்டு உழவா் சந்தையில் பேவா் பிளாக் கற்கள் பதித்தல், சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. அந்தப் பணிகள் முழுமை பெறாமலேயே கிடப்பில் போடப்பட்டது. தற்போது 48 கடைகள் உள்ள உழவா் சந்தைக்கு ஒன்றிரண்டு விவசாயிகள் மட்டுமே வருகின்றனா். இதனால் போதிய காய்கறிகள் கிடைக்காததால் பொதுமக்கள் உழவா் சந்தைக்கு வர தயங்குகின்றனா். உழவா் சந்தையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேளாண் விற்பனை துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement