FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார். 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார். 
திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பனங்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற, சுதந்திர தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது : 
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது கிராமங்களின் வளர்ச்சியைப் பொறுத்தே உள்ளது என்ற அடிப்படையில், கிராமங்களின் வளர்ச்சிக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்தத் திட்டங்களை பொதுமக்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனிநபர் இல்லக் கழிவறைகளின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். கழிவறை அமைப்பதற்குத் தேவையான உபகரணங்களை அரசுத் திட்டங்கள் வாயிலாக மக்கள் பெறலாம். தனிநபர் இல்லக் கழிவறைகள் அமைப்பதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்பு, தொற்றுநோய்கள் பரவல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். 
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் குளங்கள், குட்டைகளை தூர்வாரவும், தோட்டம் அமைக்கவும், கால்வாய் கரைகளைப் பலப்படுத்தவும் கிராம மக்களின் கருத்தறிந்து, அதற்கேற்ப பணிகளைச் செயல்படுத்த வேண்டும். 
கிராமங்கள் அளவில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தி, குழந்தைகள் கடத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம் ஆகியன தடுக்கப்படுவதையும், குழந்தைகளுக்கான சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார். 
முன்னதாக, பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு நடவடிக்கைகள், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டங்கள், அந்தியோதயா இயக்கப் பணிகள், ஊராட்சி பொதுநிதி செலவினம், குடிநீர் சிக்கனம், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், பொது சுகாதாரப் பணிகள்,  ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர். சங்கர் தலைமை வகித்தார். நாகை சார் ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மோகன், வேளாண் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) நாராயணசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தமிழ்ச்செல்வன், ஆர். தியாகராஜன், வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் பகுதியில்...
கத்தரிப்புலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், ஊராட்சிச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குரவப்புலம் ஊராட்சி கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையர் கஸ்தூரி, ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். 
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கூட்டங்களில் ஒன்றிய ஆணையர்கள் செல்வராஜ், வெற்றிச்செல்வன், மேலாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டங்களில், சாலைகளைச் சீரமைத்தல், தடைவிதிக்கப்பட்ட நெகிழிப் பைகள் மற்றும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டைக் கைவிடுவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சீர்காழியில்... 
திட்டை ஊராட்சியில் ஊராட்சிச் செயலர் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மக்கள் நீதி மய்ய நகர பொறுப்பாளர்கள் சந்துரு, பாஸ்கரன், தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அடுத்து, திருக்கருக்காவூர் ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுலோச்சனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சிச் செயலர் கே. தமிழ்மாறன் மற்றும் மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
குத்தாலத்தில்...
குத்தாலம் ஒன்றியத்திலுள்ள 51 ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாலங்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தனி அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான எம்.அசோக்குமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில்  ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(தணிக்கை) அருள்சேகரன் ஒன்றிய ஆணையர் ஜி.ஜான்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் இளங்கோவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments