உலமாக்கள் நலவாரிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டை பெறத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்
உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டை பெறத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் மற்றும் மதரஸாக்களில் பணியாற்றும் 18 முதல் 60 வயதுடைய ஆண், பெண் இருபாலரும், தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் செயல்படும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்து, நலவாரிய அடையாள அட்டை பெறலாம்.
இந்த நல வாரிய உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை, விபத்து நிவாரணம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, தகுதியானவர்கள் ஜமாத் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, கட்டணமின்றி விண்ணப்பித்து, அடையாள அட்டைகளைப் பெறலாம். ஏற்கெனவே, இந்த நலவாரிய அடையாள அட்டைப் பெற்றவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உலமாக்களாகப் பணியாற்றி 60 வயதைக் கடந்து, பணி ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற்ற ஆவணங்களை தாக்கல் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.