"வாக்காளர் இறுதிப் பட்டியல் தயாரிப்புக்கு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்'
வாக்காளர் இறுதிப் பட்டியல் தயாரிப்புப் பணிக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
வாக்காளர் இறுதிப் பட்டியல் தயாரிப்புப் பணிக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநருமான எம். வள்ளலார் வேண்டுகோள் விடுத்தார்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவைகள் குறித்து சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது, தொடர்புடைய வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட இறப்புகள் குறித்த விவரங்களை உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பெற்று, இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும், வாக்குச் சாவடி நிலையிலான முகவர்களை நியமித்து, வாக்காளர் இறுதிப் பட்டியல் தயாரிப்புப் பணிக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் எம். வள்ளலார்.
நாகை சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பத்ரிநாத், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராஜகோபால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.