3 நாள்களுக்குப் பிறகு மன்னார்குடியில் மின் விநியோகம்
கஜா புயல் சீற்றத்தால், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தடைப்பட்ட மின்விநியோகம், 3 மூன்று நாள்களுக்குப் பிறகு நகரின் ஒரு பகுதியில் மட்டும் திங்கள்கிழமை இரவு சீரானது.
கஜா புயல் சீற்றத்தால், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தடைப்பட்ட மின்விநியோகம், 3 மூன்று நாள்களுக்குப் பிறகு நகரின் ஒரு பகுதியில் மட்டும் திங்கள்கிழமை இரவு சீரானது.
கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்களும், 2,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், மின்மாற்றிகளும் சேதமடைந்தன. இதையடுத்து, மின்விநியோகத்தை சீரமைப்பதற்காக திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் சுமார் 500 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கோவில்வெண்ணி துணைமின் நிலையத்திலிருந்து, மன்னார்குடி நகர பகுதிக்கு மின்விநியோகம் செய்யும் மூவர்க்கோட்டை துணைமின் நிலையத்துக்கு, மின்கடத்தி மூலம் மின்சாரம் பெறப்பட்டு, அதன்மூலம் முதல்கட்டமாக மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மின் விநியோகம் செய்யும் பணியில், மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.அப்பகுதியில் மின்மாற்றிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு, அதன்மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கும், இந்த மின்மாற்றியிலிருந்து மின் இணைப்பு பெறும் ஒரு சில தெருக்களுக்கும் மின் விநியோகம் திங்கள்கிழமை இரவு வழங்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்விநியோகம் முழுமையாக வழங்கப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்தனர். மின்வாரியத்தினரின் இந்த நடவடிக்கையால், மன்னார்குடியில் 3 நாள்களுக்குப் பிறகு மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.