அரசியல் சாசன விதிகளை மீறுகிறார் கேஜரிவால்:உள்துறை அமைச்சரிடம் விஜயேந்தர் குப்தா புகார்
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அரசியல் சாசன விதிகளை மீறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்தனர்.
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அரசியல் சாசன விதிகளை மீறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தில்லி நார்த் பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அலுவலகத்தில், விஜேந்தர் குப்தா, பாஜக எம்எல்ஏக்கள் ஓ.பி. சர்மா, ஜெகதீஷ் பிரதான் உள்ளிட்டோர் வியாழக்கிழமை மாலை அவரை சந்தித்தனர்.
பின்னர், இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விஜேந்தர் குப்தா கூறியதாவது: "அரசியல் சாசன விதிகள், தேசிய தலைநகர் அரசு விதிமுறைகளை கேஜரிவால் அரசு மீறிவருவது பற்றிய விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை ராஜ்நாத் சிங்கிடம் அளித்துள்ளோம். அரசியலமைப்பின் உயர் பொறுப்புகளை வகிப்போருக்குரிய அதிகாரங்களை அரசியல் சாசனம் தெளிவாக வரையறுத்துள்ளது. ஆனால், தில்லி அரசு வேண்டுமென்றே இந்த விதிமுறைகளை மீறி வருகிறது.
Advertisement
Advertisement
தில்லி துணைநிலை ஆளுநருடன் தில்லி அரசு தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இதனால், அரசு நிர்வாகம் தடைபடும் நிலை ஏற்படுகிறது.
தில்லி அரசின் கோப்புகளை கையாளுவதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலமுறை யோசனை தெரிவித்துள்ள போதிலும் அதை முதல்வரும் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் மதிப்பதில்லை. மேலும், முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் எதிராக செயல்பட்டால் தங்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களோ என்ற அச்ச உணர்வில் அதிகாரிகள் உள்ளனர்.
தில்லி சட்டப்பேரவையில் தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு ஆணையம், தில்லி நேதாஜி சுபாஷ் பல்கலைக்கழகம், தில்லி கல்வி மசோதா, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட 16 மசோதாக்கள் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலின்றி நிறைவேற்றப்பட்டன.
துணைநிலை ஆளுநரின் ஒப்புதலின்றி தனியார் பள்ளிகளில் நிர்வாக இடஒதுக்கீடு முறையை ரத்து செய்த தில்லி அரசின் நடவடிக்கையை நீதிமன்றம் தலையிட்டு நிறுத்தி வைத்தது.
வருவாய்த் துறை அதிகாரிகள் நியமனம், குற்ற, சிவில் சட்டம், வக்ஃபு வாரியம் உள்ளிட்டவை தொடர்பாக தில்லி அரசு வெளியிட்ட 52 அறிவிக்கை
களும் துணைநிலை ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்படவில்லை.
இத்தகைய சூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டால்தான் 1.8 கோடி தலைநகர்வாசிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினோம் என்றார் விஜேந்தர் குப்தா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.