2,200 குவிண்டால் பதுக்கல் பருப்புகள் பறிமுதல்
தில்லி அரசும், காவல் துறையும் இணைந்து இரு கிட்டங்கிகளில் திடீரென சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்ட 2,200 குவிண்டால் பருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தில்லி அரசும், காவல் துறையும் இணைந்து இரு கிட்டங்கிகளில் திடீரென சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்ட 2,200 குவிண்டால் பருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புறநகர் தில்லியில் உள்ள லிபாஸ்பூர் பகுதியில் இரு கிட்டங்கிகளில் பருப்புகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குற்றப் பிரிவு ஆய்வாளர் சதீஷ் குமார் மற்றும் போலீஸார், உணவு வழங்கல் அதிகாரிகள் சிரஸ்பூர் சாலையில் உள்ள மக்கன் லால் சுரேஷ் குமார் கிட்டங்கியில் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது, கிட்டங்கி மூடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கிட்டங்கியின் உரிமையாளர் ராஜேஷ் குப்தாவிடம் போலீஸார் தொடர்பு கொண்டனர். அவர் மற்றொரு கிட்டங்கிற்கு அழைத்துச் சென்றார்.
குப்தாவின் முன்னிலையில் பருப்பு இருப்பு விவரம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, பல்வேறு பருப்பு வகைகள் அரசு நிர்ணயித்த இருப்பு அளவை விட அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து குப்தாவிடம் விசாரித்த போது, சம்பந்தப்பட்ட கிட்டங்கி எம்எஸ்பி ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது எனக் கூறினார். ஆனால், அதற்கான ஆதாரங்களை அவர் அளிக்கவில்லை. இது தொடர்பாக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மூலம் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேஷ் குப்தாவின் வாக்கு மூலமும் பெறப்பட்டுள்ளது.
தில்லியில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் குவிண்டால் பருப்பு நுகர்வு என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இரண்டு கிட்டங்கிகளில் மட்டுமே ஏறக்குறைய பாதி அளவுக்கு 2,200 குவிண்டால் பருப்பு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இரு கிட்டங்கிகளும் மூடப்பட்டு "சீல்' வைக்கப்பட்டன என்றார் அந்த அதிகாரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.