கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை அனுமதிக்கக் கோரும் மனு தள்ளுபடி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவின் நிவாரணத்துக்கு வெளிநாட்டு நிதியை பெறும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவின் நிவாரணத்துக்கு வெளிநாட்டு நிதியை பெறும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
மழை வெள்ளத்தால் உருக்குலைந்த கேரளத்துக்கு பல்வேறு வெளி நாடுகளும் நிவாரண நிதியை அறிவித்தன. எனினும், வெளிநாட்டு நிவாரண நிதியை பெறுவதில்லை என்ற கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிப்பதால், அந்தத் தொகையை மத்திய அரசு பெறவில்லை. இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் அருண் ஜோசப் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கேரளத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிதியை பெறும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இந்த விவகாரம் மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கை தொடர்புடையது. ஆதலால் இதில் எங்களால் தலையிட முடியாது. அதேபோல், கேரளத்துக்கு வெளிநாடுகளால் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் எதையும் மனுதாரர் தாக்கல் செய்யவும் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.