FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை விவகாரம்: சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்: திருநாவுக்கரசர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் அகமது படேல், மாநில காங்கிரஸ் தலைவர்களை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
அகமது பட்டேல் காங்கிரஸ் பொதுச் செயலராக பதவியேற்ற பிறகு முதல் தடவையாக மாநில காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அமைப்பு பொதுச் செயலர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். ரஃபேல் ஊழல், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை, தேர்தலையொட்டி பூத் கமிட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், தேர்தலுக்கு மாநில அளவில் நிதி திரட்டுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்காக, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் நிதி திரட்டவுள்ளோம்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்களுடன் ஏற்பட்ட குழப்ப நிலை, அழைக்கப்படாத சிலர் கூட்டத்துக்கு வந்ததாலேயே ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும், கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஷ்னிக்கிடம் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளேன்.
 ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும். ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டது தமிழர்களின் மனதில் ஆறாத காயமாக இன்னும் உள்ளது. அதேநேரம் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீண்ட காலமாக சிறையில் உள்ளனர். "எனது தந்தை கொல்லப்பட்டது வருத்தமே! ஆனால், யாரையும் பழிவாங்க விரும்பவில்லை' என ராகுல் காந்தியே கூறியுள்ளார் என்றார் திருநாவுக்கரசர்.
முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் அகமது படேலை,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.விஸ்வநாதன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் ரூபி மனோகரன் ஆகியோர் சந்தித்து கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 20 லட்சம் வழங்கினர். 
இது தொடர்பாக பெ.விஸ்வநாதன் கூறியதாவது: அண்டை மாநிலமான கேரளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை அறிந்து மனம் வருந்தினோம். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.  தமிழக காங்கிரஸ் கட்சியின் 8 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கினர். அந்த வகையில் ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தனது ஒருமாத பென்ஷன் தொகையான ரூ. 45,000 வழங்கினார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத பென்ஷன் தொகையை வழங்கினர். மொத்தமாக ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை அகமது படேலிடம் கேரள வெள்ள நிவாரணத்திற்காக முதல் தவணையாக வழங்கப்பட்டது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments