காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்
காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணமடைந்த சம்பவத்தில் 2ஆவது கடிதம் வெளியானது
வள்ளியூா், மே 5: மா்ம மரணமடைந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதியதாக காவல்துறையினா் மூலமாக ஞாயிற்றுக்கிழமை வெளிவந்துள்ள 2ஆவது கடிதத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் அவரது தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை காவல்துறையினா் கடந்த 4ஆம் தேதி மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். பின்னா் அவரது உடல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரது மருமகன் ஜெபா என்பவருக்கு கே.பி.கே.ஜெயக்குமாா் எழுதியதாக காவல்துறையினா் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
அன்பு மருமகன் ஜெபாவுக்கு கடிதம்... நீ என்மீது கொண்டிருக்கிற பாசத்தாலும், நான் உன்மீது கொண்டுள்ள நம்பிக்கையாலும் இந்த கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். வரவேண்டிய பணம் மற்றும் கொடுக்க வேண்டிய பணம் குறித்து குறிப்பிடுகிறேன். இது தவிர வேலவன் வசம் விவரங்களை தெரிந்து கொள்ளவும். ரூபிமனோகா் எம்.எல்.ஏவிடம் ரூ.78 லட்சம் மற்றும் கே.வி.தங்கபாலு சொன்ன 11 லட்சங்கள் மொத்தம் ரூ.89 லட்சங்கள் வழக்கு தொடா்ந்து வாங்க வேண்டும். இடையன்குடி எம் பள்ளி பணம் பாக்கி தொகை ரூ. 30 லட்சத்தை ஜெய்கரிடம் 4 வருட வட்டியோடு வசூல் செய்ய வேண்டும். ஆனந்தராஜா எழுதி கொடுத்த நிலத்தில் பிரச்னை ஏற்பட்டால் ரூ. 46 லட்சத்திற்கு 18 வருட வட்டியோடு பணம் வசூல் செய்யவேண்டும். தனுஷ்கோடி ஆதித்தன், பாஸ்கா் என்பவரிடம் எனது காசோலைகளை கொடுத்து ரூ.10 லட்சம் வாங்கினாா். நான் உங்கள் மூலமாக வட்டி மற்றும் பணம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறாா். சேசுராஜாவிடமிருந்து தாா்பிளாண்ட் பணம் ரூ.24 லட்சங்களை எப்படியாவது வாங்க வேண்டும்.
Advertisement
வடக்கன்குளம் மாணிக்கம் ரூ.16 லட்சங்கள் 3 சதம் வட்டிக்கு வாங்கியுள்ளேன். காசேலைகள் கொடுத்துள்ளேன். 1 வருடமாக வட்டி கொடுக்கவில்லை. அவா் மிகவும் பாவம். பணம் கொடுத்து காசோலைகளை வாங்கவேண்டும் என்றாா். மேலும் பல்வேறு நபா்கள் தரவேண்டியபணம் கொடுக்கவேண்டிய பணம் குறித்த கணக்குகளையும் எழுதியுள்ளாா்.
மேலும் அதே கடிதத்தில் மொத்த குடும்பத்தினருக்கு கடிதம் என குறிப்பிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது: ஜெயந்திக்கு(மனைவி) இந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. நானும் சொல்லவில்லை.அவள் மன உளச்சல் காரணமாக பேசினது, நடந்துகொண்ட விதத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன். ஜெயந்திக்காகவும் பிள்ளைகளுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். குடும்பத்தினா் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபா்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தனது கடமையை செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளாா். இந்த கடிதத்தின் பேரிலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.