மரியகிரி கல்லூரியில் பழங்கால பொருள்கள், அலங்கார மீன் கண்காட்சி தொடக்கம்: செப். 8 வரை நடைபெறுகிறது
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய, பழங்கால கலைப் பொருள்கள் மற்றும் அலங்கார மீன் கண்காட்சி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.
கண்காட்சியை மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் விழிஞ்ஞம் மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மீன்வளர்ப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள், தனியார் அக்கோரியம் சார்பில் அலங்கார மீன்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
திருவனந்தபுரம் மத்திய கிழங்கு வகைப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு, அதில் மரவள்ளி கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு, சேனை, சேம்பு, சிறுகிழங்கு, ஆரோரூட் கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகை கிழங்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஸ்டேனிஸ் ராஜா கலைப் பொருள்கள் சேகரிப்பகம் சார்பில் 200 ஆண்டு பழமையான குடிநீர் குவளை, 150 ஆண்டு பழமையான இடியப்ப அச்சு, 60 ஆண்டுகளுக்கு முந்தைய சாரட் வண்டி உள்ளிட்ட பழங்காலப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
திறப்பு விழா நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளர் ஜோஸ்பிரைட், நிதிகாப்பாளர் ரோபின்சன், கல்லூரி முதல்வர் ஜெ. தம்பி தங்ககுமரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.பி. லிப்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக் கண்காட்சியை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிடலாம். மாணவர்களுக்கு ரூ. 5, பொதுமக்களுக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.