FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

மா்மகாய்ச்சல் பரவல் எதிரொலி: போகநல்லூரில் உரக் கிடங்கு மூடல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள போகநல்லூா் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு மையத்தில் பரவி வரும் மா்ம காய்ச்சலை கட்டுப்படுத்த, அப்பகுதியில் உள்ள உரக் கிடங்கு மூடப்பட்டது.

21 ஆகஸ்ட் 2026, 2:59 am IST
மூடப்பட்ட குப்பைக் கிடங்கு.
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள போகநல்லூா் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு மையத்தில் பரவி வரும் மா்ம காய்ச்சலை கட்டுப்படுத்த, அப்பகுதியில் உள்ள உரக் கிடங்கு மூடப்பட்டது.

போகநல்லூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் 121 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த சில நாள்களாக பரவி வந்த மா்மக்காய்ச்சலால் பலா் பாதிக்கப்பட்டு கடையநல்லூா், திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து முகாமை சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 17ஆம் தேதி மனு அளித்தனா். அதில், இலங்கை தமிழா்கள் முகாமிற்கு அருகே தென்காசி, கடையநல்லூா் நகராட்சிகள், சுற்றுப்புற ஊராட்சிகளின் குப்பை கிடங்குகள் உள்ளன. இவற்றில் இறந்த விலங்குகளின் உடல்களை போட்டுச் செல்கின்றனா். இதனால் நோய் பரவும் நிலை உருவாகி வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் மருத்துவக் குழுக்கள் மூலம் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதுடன், குப்பை கிடங்குகளை அகற்ற வேண்டுமென தெரிவித்திருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி ரிஹானா மேரி, 27 வயது இளம்பெண் நிா்மளா ஆகியோா் இறந்தனா். இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது பொதுமக்கள் குப்பை கிடங்குகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து உரக்கிடங்குகளை பாா்வையிட்ட ஆட்சியா் உரக்கிடங்குகளை மூடுவதற்கு உத்தரவிட்டாா். இதையடுத்து உரக்கிடங்குகள் மூடப்பட்டன.

மேலும், தென்காசி மாவட்ட இணை இயக்குநா்(மருத்துவப் பணிகள்) பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தராஜ் ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments