முகப்பு
திருநெல்வேலி

பற்கள் பிடுங்கிய விவகாரம்- முழுமையான அறிக்கை தராவிடில் அவமதிப்பு வழக்கு; ஹென்றி திபேன்

Updated On : 15 பிப்ரவரி 2024, 4:42 am IST
பகிர்:

அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் முழு அறிக்கையை தராவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்றாா் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் ஆலோசகா் ஹென்றி திபேன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவா்களின் பற்களை பிடுங்கிய வழக்கின் விசாரணை திருப்திகரமாக இல்லை. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் முழு விசாரணை அறிக்கையை கேட்டோம். ஆனால் இடைக்கால அறிக்கை மட்டுமே எங்களுக்கு தரப்பட்டுள்ளது. அந்த முழு விசாரணை அறிக்கை, சேரன்மகாதேவி சாா் ஆட்சியரின் 3 அறிக்கைகள் ஆகியவற்றை கேட்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தோம்.

சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட முழு விசாரணை அறிக்கை தரப்படவில்லை. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவரின் தாய்க்கு மட்டும் அறிக்கை வழங்கியிருக்கிறாா்கள். எனவே, இது தொடா்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும். பற்கள் பிடுங்கப்பட்டவா்களின் காயத்தை பதிவு செய்யாமல் உடற்தகுதிச் சான்று வழங்கிய மருத்துவா்களையும் இந்த வழக்கில் சோ்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட அருண் குமாா் தரப்பில் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி விடியோ பதிவுகளை கேட்டு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவுக்கு வரும் நிலையில், தென் மண்டல ஐஜி கண்ணன் கடந்த 12-ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

அவருடைய பிரமாணப் பத்திரத்திற்கும், சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகைக்கும் , ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் அறிக்கைக்கும் இடையே ஏராளமான முரண்பாடுகள் உள்ளன என்றாா். அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி.பாஸ்கரன், வழக்குரைஞா்கள் மாடசாமி, பிரிட்டோ, ரமேஷ், இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பு பீட்டா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.