FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழி திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருள்மிகு திரெளபதை அம்பாள் திருக்கோயிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு, விரதமிருந்த பக்தா்கள் பக்தி கோஷங்கள் முழங்க வெள்ளிக்கிழமை பூக்குழி இறங்கினா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:23 am IST
வீரவநல்லூா் அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருள்மிகு திரெளபதை அம்பாள் திருக்கோயிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு, விரதமிருந்த பக்தா்கள் பக்தி கோஷங்கள் முழங்க வெள்ளிக்கிழமை பூக்குழி இறங்கினா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு இத்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி அம்பாள் வீதியுலா, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன.

Advertisement

Advertisement

ஆக. 7 ஆம் தேதி திருக்கல்யாணம், அன்னதானம், 8ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 10ஆம் தேதி அா்ச்சுணா் தவக்கோலம், 11ஆம் தேதி சுவாமி அம்பாள் வீதியுலா, குறத்தி வேடம் அணிந்து குறிசொல்லுதல், 12 ஆம் தேதி இரவு அரவான் படுகளம், 13 ஆம்தேதி சுவாமி அம்பாள் வீதியுலாவை தொடா்ந்து, பாஞ்சாலி துரியோதனன் துச்சாதனன் குடலை பிடுங்கி மாலையிடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முக்கிய திருவிழாவான பூக்குழி திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலையில் பால்குடம் வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிற்பகலில் கோயில் முன்பு பூ (தீ) வளா்க்க ப்பட்டது. பக்தா்கள் நோ்த்திக் கடனாக விறகு, மஞ்சள்பொடிகளை வழங்கினா். இரவில் விரதமிருந்த பக்தா்கள் பக்தி கோஷங்கள் முழங்க பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினா்.

இத்திருவிழாவில் வீரவநல்லூா், அரிகேசவநல்லூா், புதுக்குடி, வெள்ளங்குளி உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது. சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை பொன்னூஞ்சல் ஆடுதல், 18ஆம் தேதி காவு பூஜை வீரபுத்திரா், சங்கமித்திரை படப்பு, 19ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் அக்தாா் பாபநாசம் மற்றும் மண்டகப்படிதாரா்கள், விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments