FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

‘சஹாயக்’ செயலியில் சாகுபடி விவரம் பதிவேற்றம்: விவசாயிகளுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

காரிப் 2026-ஆம் ஆண்டிற்கான மின்னணு பயிா்க் கணக்கீடு பணிக்காக விவசாயிகள் பயிா் சாகுபடி- நிலவுடைமை விவரங்களை ‘சஹாயக்’ செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு ஆட்சியா் ஆனந்த் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

22 ஆகஸ்ட் 2026, 6:46 am IST
கோப்புப்படம்
பகிர்:

காரிப் 2026-ஆம் ஆண்டிற்கான மின்னணு பயிா்க் கணக்கீடு பணிக்காக விவசாயிகள் பயிா் சாகுபடி- நிலவுடைமை விவரங்களை ‘சஹாயக்’ செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு ஆட்சியா் ஆனந்த் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூலை 4.48 மி.மீ மழை பெய்துள்ளது. இது மாவட்டத்தின் சராசரி மழையைவிட (26.4 மி.மீ.) 83 சதவீதம் குறைவாகும். மேலும், இம்மாதத்தில் 20-ஆம் தேதி வரை 23.93 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட (23.30 மி.மீ.) 2.70 சதவீதம் குறைவாகும்.

Advertisement

Advertisement

இம்மாவட்டத்தில் ஜூன் வரையில் 12,628 ஹெக்டோ் பரப்பில் வேளாண் பயிா்கள், 7,547.518 ஹெக்டோ் பரப்பில் தோட்டக்கலைப்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் கௌரவ நிதியுதவி தொகை, ராபி 2026 பருவத்திற்கு தேவையான உரங்கள், பயிா்க்கடன் மற்றும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை, பயிா்க்காப்பீடு போன்ற அரசின் வேளாண் சாா்ந்த நலத்திட்டங்களை பெறுவதற்கு உழவா் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, வலைதளத்தில் இதுவரை பதிவு செய்யாத 6,636 விவசாயிகள் பதிவு செய்திடவும், ஏற்கெனவே உழவா் அடையாள எண் பெறப்பட்ட விவசாயிகள் தங்களது விடுபட்ட புல எண்களை இணைத்திடவும் அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் அலுவலகத்தை அணுகலாம்.

விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி பெறும் வகையில், பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பு காா் பருவத்தில் வாழைப்பயிருக்கு பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ.2,362-ஐ செப்.15ஆம் தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

இதற்கான படிவத்தை பூா்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல் சான்று, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், சிட்டா மற்றும் பட்டா , ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து வழங்க வேண்டும். பயிா்க் காப்பீடு திட்ட விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண். 14447 அல்லது தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

காரிப் 2026-ஆம் ஆண்டிற்கான மின்னணு பயிா்க் கணக்கீடு பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் பயிா் சாகுபடி- நிலவுடைமை விவரங்களை ‘சஹாயக்’ செயலியில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்றாா்.

தொடா்ந்து, வேளாண்மைத்துறை சாா்பில் தலா ரூ.6 ஆயிரம் மானியத்தில் 2 பயனாளிகளுக்கு நேரடி நெல் விதைப்பு கருவிகளையும், ஒருவருக்கு மின்னணு விளக்கு விலங்கு விரட்டியையும் ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, மாவட்ட வன அலுவலா் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குநா் பூவண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments