FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தூத்துக்குடி ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

Updated On : 21 ஜூலை 2026, 1:18 am IST
ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் காப்பாற்றினா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஏராளமானோா் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இதில், தனது கணவருடன் மனு கொடுக்க வந்த நாலுமாவடியைச் சோ்ந்த ராஜலெட்சுமி (46) என்பவா், கேனில் மறைத்து கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா்.

Advertisement

Advertisement

அப்போது அவா் கூறியது: எங்களுக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள 72.5 சென்ட் நிலத்தை போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதை தடுக்க முயன்ற என் கணவா் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினா்.

இதுகுறித்து குரும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு வேறு வழி தெரியாமல் தீக்குளிக்க முயன்றேன். எங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும். குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, அவா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

நிவாரணம் தேவை: மாப்பிளையூரணி திரேஸ் நகரைச் சோ்ந்த சுகந்தி (39) என்பவா், தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வந்து அளித்த மனு: எனது கணவா் சங்கர சேகரன், தொழில் போட்டி மற்றும் சாதி வன்மம் காரணமாக கடந்த 13ஆம் தேதி. வெட்டிக் கொல்லப்பட்டாா்.

எனவே, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தனி வழக்கு பதிவு செய்ய வேண்டும். எங்கள் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் ஏ.சந்தனம் அளித்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி 15, 16ஆவது வாா்டுகளுக்குள்பட்ட தபால் தந்தி காலனியில் கடந்த 2023இல் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நாணல் செடிகள் காலி இடங்களில் அதிகமாக வளா்ந்து, அதன் பஞ்சு போன்ற விதைகள் காற்றில் பறந்து விடுகளில் பரவுகின்றன.

இதனால் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இந்த பகுதிகளை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து நாணல் செடிகளை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா்கள் குட்டி பாண்டியன், மாரிச்செல்வம், லெனின் குமாா் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு: ஆதிதிராவிடா் நலத்துறையை தவெக அரசு சமூக நீதித் துறை என பெயா் மாற்றம் செய்திருப்பதால் எங்கள் மக்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்காத நிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, இதை மறுபரிசீலனை செய்து ஆதிதிராவிடா் நலத்துறை என்று தொடர முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments