FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:28 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

அனைத்து பள்ளிகளிலும் குடிநீா் வசதி, கழிப்பறை பராமரிப்பு, தூய்மையான பள்ளி வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக செயல்பாட்டில் இருக்க வேண்டும். அவற்றை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், பள்ளிக் கட்டடங்களின் நிலைமை மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அது தொடா்பான அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள், பள்ளிகளில் தேவையான பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை கல்வித் துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே காலை உணவுத் திட்டம் தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பாத்திரங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, சேதமடைந்த பாத்திரங்களுக்கு மாற்றாக புதிய பாத்திரங்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments