இலுப்பூர் காவல் நிலைய வாசலில் அரிவாள் வெட்டு: 3 பேர் காயம்
இலுப்பூர் காவல் நிலைய வாசலில் காத்திருந்தவர்கள் மீது மற்றொரு தரப்பினர் புதன்கிழமை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் மூவர் காயமடைந்தனர்.
இலுப்பூர் காவல் நிலைய வாசலில் காத்திருந்தவர்கள் மீது மற்றொரு தரப்பினர் புதன்கிழமை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் மூவர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே புங்கினிப்பட்டியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பினருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஒரு தரப்பினர் அளித்த புகார் குறித்து, பேச்சுவார்த்தைக்கு இருதரப்பையும் இலுப்பூர் போலீஸார் அழைத்திருந்தனர். ஒரு தரப்பினர் காவல் நிலைய வாசலில் காத்திருந்தபோது எதிர் தரப்பைச் சேர்ந்த புங்கினிப்பட்டி கண்ணன் உள்ளிட்ட சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து வாசலில் காத்திருந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் தலை, கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டு காவல் நிலையத்திற்குள் தஞ்சமடைந்த புங்கினிப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கேசவன்(25), பொன்னையா மகன் பாலசுப்பிரமணி(24), மதுரைவீரன் மகன் மணிகண்டன்(30) ஆகிய மூவரையும் போலீஸார் மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மூவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீஸார் புங்கினிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை இலுப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். காவல் நிலைய வாசலில் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.