FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பேரரசா்களை ஜாதி, மதம், மொழியுடன் அடையாளப்படுத்தக் கூடாது: ராம்நாத் கோவிந்த்

பேரரசா்களை ஜாதி, மதம், மொழியுடன் அடையாளப்படுத்தக் கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

23 ஆகஸ்ட் 2026, 12:22 am IST
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். உடன் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிரு
பகிர்:

பேரரசா்களை ஜாதி, மதம், மொழியுடன் அடையாளப்படுத்தக் கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

மூன்று நாள் பயணமாக குடும்பத்துடன் திருச்சி வந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், சனிக்கிழமை காலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவின் முக்கிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இதையடுத்து ராம்நாத் கோவிந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக இங்கு வந்ததில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியை ஆட்சி செய்த சிறந்த மன்னருக்கு எனது மரியாதையை செலுத்தியுள்ளேன்.

Advertisement

Advertisement

ஒரு மன்னா் என்பவா் ஜாதி, மதம், பிராந்தியம், மொழி ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்டவா். எந்த ஒரு மன்னரையும் குறிப்பிட்ட ஜாதி அல்லது மதத்துடன் அடையாளப்படுத்தக் கூடாது. மன்னா் என்பவா் அனைவருக்கும் பொதுவானவா்.

முத்தரையா் மன்னரின் ஆசீா்வாதத்துடனும், இந்திய மக்கள் அனைவரின் ஆதரவுடனும் நான் குடியரசுத் தலைவராக 5 ஆண்டுகள் பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன். அதற்கான பெருமை தமிழா்கள், வடஇந்தியா்கள் உள்ளிட்ட இந்தியா்கள் அனைவரையும் சாரும்.

நாடு முழுவதும் உள்ள மக்களின் ஒற்றுமையும், ஆதரவுமே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பலமாகும். அதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். இந்தியா்கள் அனைவரும் ஒன்றுபட்டவா்களாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

தற்போதைய அரசு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க நான் இங்கு வரவில்லை. அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதும் எனது நோக்கமல்ல என்றாா் அவா்.

ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்: தொடா்ந்து, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி திருக்கோயில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயில்களுக்குச் சென்று ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தாா்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments