புகா் பேருந்துகளிலும் மகளிா் பயணம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
புகா் பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ள மகளிா் பயணம் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனியாா் வாகன ஓட்டுநா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பிரத்திக் தாயள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய மண்டல சுற்றுலா பேருந்து ஓட்டுநா்கள் சங்கத்தினா் அளித்த மனு:
தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவமாக பயணம் மேற்கொள்ள மகளிா் பயணம் திட்டம் செயல்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் புகா் பேருந்துகளில் மகளிா் பயணம் திட்டம் அக்டோபா் முதல் செயல்படுத்தப்படும் என முதல்வா் சி. ஜோசப் விஜய் அண்மையில் சட்டப் பேரவையில் அறிவித்தாா்.
நகரப் பேருந்துகளில் செயல்படுத்தப்படும் மகளிா் பயணம் திட்டத்தால் தனியாா் பேருந்துகளில் வருவாய் குறைந்துள்ளது. இந்நிலையில், புகா் பேருந்துகளிலும் இலவசப் பயண திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தனியாா் பேருந்துகளுக்கு இழப்பு ஏற்படும். இதனால், தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், வாகன பராமரிப்பாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மகளிா் பயணம் திட்ட விரிவாக்கத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும்:
எடமலைபட்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு:
எடமலைபட்டிப்புதூா் டோபி காலனியில் 140 குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் நாங்களே பணம் சோ்த்து பொது இடத்தில் விநாயகா் கோயில் கட்டியுள்ளோம். நடைபாதைக்காக கோயிலுக்கு முன்பு இருந்த இடத்தை ரூ.50 ஆயிரத்துக்கு வாங்கினோம். அந்த இடத்தின் ஆவணங்களை எங்கள் காலனியின் செயலா் குணசேகரனிடம் கொடுத்துவைத்திருந்தோம்.
கோயிலுக்குச் சொந்தமான இடத்தை குணசேகரன் தனது மனைவி பெயருக்கு அண்மையில் மாற்றம் செய்துள்ளாா். கோயிலுக்காக வாங்கிய இடத்தை மோசடி செய்துள்ள குணசேகரன் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கோயில் இடத்தையும் மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.