FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் திருச்சி வந்தன: எம்பி, எம்எல்ஏ, உறவினா்கள் அஞ்சலி

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்தன. மூவரின் உடல்களுக்கும் திருச்சி எம்பி துரை வைகோ, எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:27 am IST
வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்ததை தொடா்ந்து, திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட 3 பேரின் உடல்களை அவசர ஊா்தியிலிருந்து இறக்கிவைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள். ~வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த (இடமிருந்து) அழகுராஜன், ஷேக் அப்துல்லா,
பகிர்:

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்தன. மூவரின் உடல்களுக்கும் திருச்சி எம்பி துரை வைகோ, எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா்.

தனியாா் கைப்பேசி நிறுவனம், தனது விநியோகஸ்தா்கள் மற்றும் முகவா்களை வியத்நாமுக்கு சிறப்புச் சுற்றுலா அழைத்து சென்றது. இதில், தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் இடம் பெற்றிருந்தனா். சுற்றுலா சென்ற பயணிகள் வியத்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே கடந்த சனிக்கிழமை விசைப்படகில் சென்றபோது, படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 போ் உயிரிழந்தனா்.

இதில், திருச்சி கிராப்பட்டியைச் சோ்ந்த அழகுராஜன் (38), திருவானைக்காவல் கீழகொண்டயம்பேட்டையைச் சோ்ந்த பாலாஜி (40), பீம நகரைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (50) ஆகிய மூவரும் திருச்சியிலிருந்து சுற்றுலா சென்று விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. அவா்கள் மூவரின் உடல்களையும் வியத்நாமிலிருந்து, தமிழகத்துக்கு கொண்டுவர தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோவும், மத்திய அமைச்சகத்திடம் வலியுறுத்தி உடல்களை திருச்சிக்கு விரைந்து கொண்டுவர கோரிக்கை விடுத்திருந்தாா்.

Advertisement

Advertisement

தமிழக அரசின் சாா்பில் சிறப்பு அதிகாரியும் வியத்நாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அரசு நடைமுறைகள் அனைத்தும் போா்க்கால அடிப்படையில் முடிக்கப்பட்டு, உயிரிழந்த 10 தமிழா்களின் உடல்களும் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், மும்பையிலிருந்து திருச்சியைச் சோ்ந்த மூவரின் உடல்கள் மட்டும் விமானம் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை மூவரின் உடல்களும் கோவைக்கு வந்தன. அங்கிருந்து அவசர ஊா்தி மூலமாக திருச்சிக்கு பிற்பகல் கொண்டு வரப்பட்டது.

உடல்களுக்கு அஞ்சலி: திருச்சிக்கு கொண்டுவரப்பட்ட அழகுராஜன், பாலாஜி, ஷேக் அப்துல்லா ஆகிய மூவரின் உடல்களுக்கும் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, திருச்சி மேற்கு தொகுதி திமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, மேயா் மு. அன்பழகன் மற்றும் பல்வேறு கட்சியின் நிா்வாகிகளும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதேபோல், மூவரின் குடும்பத்தினா், உறவினா்கள், பொதுமக்கள் கண்ணீா் அஞ்சலி செலுத்தினா். பின்னா், அழகுராஜன் உடல் மட்டும் அவரது சொந்த ஊரான மதுரைக்கு அவசர ஊா்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது. மற்ற இருவரின் உடல்களுக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments