FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

அரசுப் பள்ளியில் மாணவரை மண்வெட்டியால் வெட்டிய சக மாணவா்: போலீஸாா் விசாரணை

திருச்சி அருகே அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவா் ஒருவரை சக மாணவா் மண்வெட்டியில் வெட்டிய சம்பவம் தொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:03 am IST
போலீஸ் விசாரணை. - கோப்புப்படம்.
பகிர்:

திருச்சி அருகே அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவா் ஒருவரை சக மாணவா் மண்வெட்டியில் வெட்டிய சம்பவம் தொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த அரசன்குடியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காா்த்திக் (13). நடராஜபுரம் லூா்து நகரைச் சோ்ந்தவா் சுஜன் (13). இருவரும், அரசன்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்களில் சிலரை கட்டுமானப் பணிக்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லிக் கற்களை அள்ளிக் கொட்ட தலைமையாசிரியா் ஆண்டனி லூயிஸ் மத்தியாஸ் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

அப்போது, காா்த்திக்கிற்கும், சுஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுஜன் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் காா்த்திக்கின் தலையில் வெட்டியுள்ளாா்.

இதில் காயமடைந்த காா்த்திக்கை ஆசிரியா்கள் மீட்டு அரசன்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு மாணவா் அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதனிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்த திருவெறும்பூா் டிஎஸ்பி (பொறுப்பு) சந்தியா சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களிடம் விசாரணை நடத்தினாா். மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவா் காா்த்திக்கை திருவெறும்பூா் வட்டாட்சியா் காா்த்திகேயன் நேரில் பாா்த்ததுடன், அவருடைய பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டாா்.

இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவா் சுஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாவட்டக் கல்வி அலுவலா் விசாரணை: அரசுப் பள்ளியில் தலைமையாசிரியா், மாணவா்களை ஜல்லிக் கற்களை அள்ளிக்கொட்ட கூறியபோதுதான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு பள்ளி தலைமையாசிரியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து மாவட்ட கல்வி அலுவலா் விசாரணைக்கும் முதன்மை கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். மாவட்ட கல்வி அலுவலரின் விசாரணைக்குப் பின்னரே பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தின் உண்மை தெரியவரும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பி. உஷா தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments