கருவேப்பிலங்குறிச்சி அருகே சேறும் - சகதியுமான சாலையில் நாற்று நட்டுப் போராட்டம்
விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சேறும் - சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சேறும் - சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சி.கீரனூர் - பவளங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் - குழியுமாக போக்குவரத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே, சாலையைச் சீரமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை மனுக்களை அளித்தனராம்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்தச் சாலைங்களில் உள்ள மணலை எடுத்து ஊழியர்கள் சாலையில் இட்டு நிரப்பினராம்.
அதன் பின்னர் பெய்த மழையால் சாலை மீண்டும் குண்டும் }குழியுமானது மட்டுமன்றி, சேறும் - சகதியுமாக மாறியது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை அந்த வழியாக வந்த லாரியும், தனியார் பேருந்தும் சேற்றில் சிக்கிக் கொண்டன. இதனால், போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது. பணிக்குச் செல்வோர், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்களும், மாணவர்களும் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையைச் சீரமைக்காத அதிகாரிகளைக் கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.
தகவலறிந்த விருத்தாசலம் சாலைப் போக்குவரத்து ஆய்வாளர் விமலா ராணி, உதவிக் கோட்டப் பொறியாளர் நல்லத்தம்பி, கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் அந்த இடத்துக்கு வந்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையைச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்களும், மாணவர்களும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.