FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாடு முழுவதும் பாகுபாடற்ற கல்வியை வழங்க வேண்டும்

நாடு முழுவதும் பாகுபாடற்ற கல்வியை வழங்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பிரசாரப் பயணக் குழுவினர் விழுப்புரத்தில் வியாழக்கிழமை பிரசாரம் செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

நாடு முழுவதும் பாகுபாடற்ற கல்வியை வழங்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பிரசாரப் பயணக் குழுவினர் விழுப்புரத்தில் வியாழக்கிழமை பிரசாரம் செய்தனர்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாகுபாடற்ற கல்வி, அறிவியல் பூர்வமான கல்வி வழங்க வேண்டும், பொதுக் கல்வியை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் கடந்த திங்கள்கிழமை வாகனத்தில் பிரசாரப் பயணத்தைத் தொடங்கிய இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய 
பிரசாரக் குழுவினர் வியாழக்கிழமை விழுப்புரம் வந்தனர். அவர்களை பழைய பேருந்து நிலையம் அருகில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை அருகில் வரவேற்று, பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. 
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.விக்னேஷ் தலைமை வகித்தார். பிரசாரப் பயணத்துக்கு தலைமை வகிக்கும் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு, அகில இந்திய துணைத் தலைவர் 
பி.உச்சிமாகாளி ஆகியோர் விளக்க உரையாற்றினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே.அறிவழன், மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநில செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் ஏ.அபுபக்கர் சித்திக், வாலிபர் சங்க துணைத் தலைவர் எஸ்.பிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து, பிரசாரக் கூட்டத்தில் அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு பேசியதாவது: சுதந்திரப் போராட்ட பாரம்பரியமிக்க இந்திய மாணவர் சங்கம், தற்போது கல்வித் துறை சந்தித்து வரும் எதேச்சதிகாரத்துக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை நடத்துகிறது. 
இதுவரை தொடங்கப்படாத, அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகத்துக்கு மத்திய பாஜக அரசு பல கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. கல்வியை காவிமயமாக்க ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை கல்வித் துறை உயர் பதவிகளில் அமர்த்துகிறது. கல்விக்கு கூடுதலாக நிதி ஒதுக்க மத்திய அரசு தயாராக இல்லை.
புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கவும் ஆர்வம் காட்டவில்லை. இவற்றையெல்லாம் எதிர்த்து போராட வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். 
நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தரமான கல்வியை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். தமிழக மாணவர்களும் இந்த பிரசாரத்தில் பங்கேற்க வேண்டும் என்றார். இதையடுத்து, இக்குழுவினர் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments