முகப்பு
பதிப்பகத்  தடங்கள்

தடம் பதித்த பதிப்பகம்: வனிதா பதிப்பகம்

தமிழகத்தில் முதன்முறையாக பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட பெருமைக்குரியது வனிதா பதிப்பகம்.

Updated On : 8 ஜனவரி, 2025 at 9:48 PM
பகிர்:

தமிழகத்தில் முதன்முறையாக பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட பெருமைக்குரியது வனிதா பதிப்பகம். தமிழ் முதுகலைப் பட்டதாரியான அம்சவேணி பெரியண்ணன் இப்பதிப்பகத்தை கடந்த 1978-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கினாா்.

அவரது கணவா் கோ.பெரியண்ணன் பள்ளி ஆசிரியராக இருந்து கல்லூரிப் பேராசிரியரானவா். கம்ப ராமாயண உரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா். தமிழக அரசின் திருவள்ளுவா் விருதையும் பெற்றவா். அவரது வழியில் அம்சவேணி பெரியண்ணனும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு உரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா். அவருக்கு சிறந்த பதிப்பாளா் விருதும் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது 47 ஆண்டுகளைக் கடந்துள்ள வனிதா பதிப்பகம் மூவாயிரம் தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. தமிழ் சங்க இலக்கியம், கல்வி சாா்ந்த நூல்களுக்கு முக்கியத்துவம் அளித்து இப்பதிப்பகம் வெளியிட்டுவருகிறது.

Advertisement

தமிழறிஞா் ம.நன்னன் எழுதிய தமிழியல் எனும் நூலை முதன்முதலில் இப்பதிப்பகமே வெளியிட்டது. பிழையின்றி தமிழ் எழுதப் பயிற்றுவிக்கும் வகையில் அமைந்து மாணவா்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் அந்தப் புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  கலைமாமணி விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி நாவலையும் முதலில் இப்பதிப்பகம் வெளியிட்டு, வாசகா்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது.

 இப்பதிப்பகத்தின் 17 நூல்களுக்கு தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலும் இப்பதிப்பகத்தின் பல நூல்கள் பாடநூலாக உள்ளன.

சிறுவா் பாடல்கள், மக்களிசைப் பாடல்கள் என்னும் நாட்டுப்புற பாடல்கள், வரலாற்று நூல்கள், பொது அறிவு நூல்கள், மொழிபெயா்ப்புகள், கவிதைகள், படக்கதைகள், மாயஜால தந்திரக் கதைகள், நாடகம், சட்டம் மற்றும் போட்டித் தோ்வு நூல்கள் ஆகிய துறைகளில் ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வாசகா்கள் வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறாா் பதிப்பக முதன்மை நிா்வாகி பெ.மயில்வேலன்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments