ஜன நாயகன் புதிய வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் பதில்!
ஜன நாயகன் ஜூன் 3-ஆவது வாரம் வெளியாக வாய்ப்பு...
ஜன நாயகன் திரைப்படம் அடுத்த மாதம் 3-ஆவது வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்கள் சிலவற்றில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியாக வரும் ஜூன் 19 என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆயினும், இதைக் குறித்து படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உறுதியான பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், படத் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா கடந்த வெள்ளிக்கிழமை கோயில் ஒன்றுக்கு வழிபாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசும்போது, “படக்குழு சென்சார் சான்றிதழுக்காக காத்திருப்பதாகத்” தெரிவித்தார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது : “ஜன நாயகனைப் பற்றி பேசும் இடம் இதுவல்ல. நான் கோயில் வழிபாட்டுக்காக வந்துள்ளேன். ஆனால், நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, சான்றிதழுக்காகக் காத்திருக்கிறோம். அவர்கள் எந்நேரத்திலும், அதிலும் வெகுவிரைவில் அதைத் தரவிருக்கிறார்கள் என்று நான் உறுதியாக இருக்கிறேன். அதனைத்தொடர்ந்து, வெகு விரைவில் படத்தை வெளியிடுவோம். வேறு எவற்றைப் பற்றியும் பேசும் இடம் இதுவல்ல.
சென்சார் சான்றிதழ் எங்கள் கைகளில் கிடைத்ததும், பட வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்படும். நாங்கள் இப்படத்தை உலகெங்கிலும் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடுவோம்” என்றார்.
2026 பொங்கல் விடுமுறையையொட்டி திரைக்கு வர திட்டமிடப்பட்டிருந்த ஜன நாயகன், திட்டமிட்டபடி கடந்த ஜன. 9-இல் வெளியாகவில்லை. சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
சென்சார் குழுவுக்கு கடந்தாண்டு டிசம்பரில் இப்படம் திரையிடப்பட்டதாகவும், ஆனால், அப்படத்தின் பல இடங்களில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டிய தணிக்கை வாரியம் அவற்றை நீக்க அறிவுறுத்தியது. அதனை ஏற்று, பரிந்துரைக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து நீக்கிய படக்குழு மறு தணிக்கைக்கு படத்தை சமர்ப்பித்தது.
ஆயினும், இன்னும் சில ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் அதனால் மறு சீராய்வு குழுக்கு படம் அனுப்பப்பட்டது. ஆனால், இன்னும் சென்சார் சான்றிதழ் இப்படத்துக்கு வழங்கப்படவில்லை.
இதனிடையே, அரசியல் காரணங்கள் பல, ஜன நாயகன் பட வெளியீட்டுக்கான தாமதத்துக்கான காரணமாகச் சுட்டிக்காட்டி பொதுவெளியில் பேசப்பட்டது. ஜன நாயகன் பட வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த மாதம், ஜன நாயகன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 5 மாதங்களாக கிடப்பிலுள்ள ஜன நாயகன் எப்போது வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்புக்கு ஜூனில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Jana Nayagan producer on film's release date
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.