திரைத்துறையினருக்கு மட்டும் தனி சட்டம் உள்ளதா?: ‘கபாலி' பட வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி!
கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த "கபாலி' திரைப்படத்துக்கு அரசு நிர்ணயித்த திரையரங்கு கட்டணத்தை விட, 6 மடங்கு வரை பல திரையரங்குகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. பெரிய திரை நட்சத்திரங்கள் நடித்து வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதோடு, விதிகளை மீறி அதிக காட்சிகளும் திரையிடப்படுகின்றன.
"கபாலி' திரைப்படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்தது சுமார் ரூ.250 கோடி வரை சுரண்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
Advertisement
இந்த மனு தனி நீதிபதி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "இந்தப் பிரச்னையில் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய பட்டியலை வழங்கினார்.
இதையடுத்து நீதிபதி கூறியதாவது:-
சிறிய திரையரங்குகள் மட்டும்தான் அரசு அதிகாரிகளின் கண்களுக்கு புலப்படுமா?
இலவச டிக்கெட்டுக்கு விதிமீறலா? கூடுதல் கட்டணம் வசூலித்த பெரிய திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏன்? திரைத்துறையினருக்கு மட்டும் தனி சட்டம் உள்ளதா?
பெரிய நட்சத்திரங்கள் நடித்து வெளியாகும் படங்கள் என்றால் விதிகள் முழுமையாக மீறப்படுகின்றன. "கபாலி' திரைப்படம் அதிகாலை 3 மணிக்கே காட்சிப்படுத்த அனுமதி வழங்கியது யார்? ஏற்கெனவே, இந்த நீதிமன்றம் மனுதாரரின் புகாருக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. அவற்றில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அக்டோபர் 21-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.